தொட்டுவிடும் தூரத்தில் நிலா
தொடமுடியா உறவில் நான்
உணர்வுகளைக் கட்டுப்படுத்த
உட்பக்க கன்னம் கடித்தவனாய்
என்னை நான் அடக்கிக்கொண்டு
நீண்ட நேரம் போராடுவேன்
நீ என்னருகில் இருந்த
கணப்பொழுதில் எல்லாம்.......!
உனக்கு நான்
காதல் கொண்ட காவலன்..
எல்லா பொழுதிலும் நான்
புனிதம் பேணி தப்பவிட்டேன் தருணத்தை.....!
வெள்ளி மாலை அலுவலகம்
முடிந்து வீடு வருமுன்னே - அனுமதி
கேட்பாய் "இன்றிரவு கதைப்போமா?" என்று
விடிய விடிய கதைத்தோம்
விடியற்காலை கோழி கூவ
கோழியினை கடிந்தோம்..
கடிந்த மறுகணம் பாங்கு
சொல்லக் கேட்டோம்
கேட்ட மறுகணம் துண்டித்தோம்
அழைப்பினை... இதுவரை
புரியவில்லை எதனை கதைத்தோம்!!!!
உன் ஒரு துளி பார்வைக்காய்
ஓராயிரம் முறை வருவேன்
உன் நிழல் தெரியும் வீதியெல்லாம்...
ஒரு முறையேனும் பார்த்திடுவேன்
உன் ஓவிய முகத்தை
ஓராயிரம் முறைக்கப்புறமேனும்...
கவிதையும் இலக்கியமும்
படிக்கும் போதே பிடிக்காது - உனக்கு....
கவிதையே! நீ கதைக்கும்போது -வேறு
எதுவுமே பிடிக்காது எனக்கு..
அழகில் நான் கம்மிதான்
அறிவிலும் நான் டம்மிதான்
அளவிலும் நான் சின்னிதான்
இருந்தும் என்னை காதல் செய்தாய்
இருப்பதிலே நானே சிறந்தவன் என்றாய்
இருக்கும்போதே எடுத்திருக்கலாம்
இழந்தபின் மறந்திருக்கலாம்
தப்பவிட்டேன் தருணத்தை.....!
வில்லுடைக்க தருணம்
பார்த்திருந்தேன்
இளவரசியை மணக்க..
விசாவுடன் வந்தான்
ராவணன்
இளவரசியை மணக்க...
தப்பவிட்டேன் தருணத்தை !........
இயல்பாய் நான் இல்லை
இயல்பாக நடிக்கிறேன்...
இனியும் என்னால் முடிய வில்லை
இனிய நினைவோடு துடிக்கிறேன்